பலன்தரும் பரிகாரத் தலம்: ஆயுளை நீட்டிக்கும் அண்ணன் பெருமாள்!

ஆலய தரிசனம்

இங்கே எழுந்தருளும் ஸ்ரீனிவாசர், திருப்பதிப் பெருமாளின் மூத்த சகோதரர் என்று கருதப்படுவதால் “அண்ணன் பெருமாள்’ எனப்படுகிறார். இக்கோயிலுக்கும், திருப்பதிக்கும் தொடர்பு உண்டு என்பதை ஆழ்வார் பாசுரங்களால் அறிந்துகொள்ளலாம்.

பத்மபுராணத்தின் 15வது அத்யாயத்தில் அகத்திய முனிவர் உபரிசரவாசு என்ற அரசனுக்கு சொல்வதாய் அமைந்துள்ளது இத்தல மகிமை.

சூரிய வம்சத்தைச் சேர்ந்த அரசன் துந்துமாறன், தன் நாட்டை சிறந்த முறையில் நிர்வகித்தான். அவனுக்கு ஸ்வேதா என்ற மகன் பிறந்தான். குலகுரு வசிஷ்டர், ஸ்வேதாவின் ஜாதகத்தை ஆராய்ந்து, அவனுக்கு ஆயுள் குறைவாக உள்ளதென அறிந்தார். ஒன்பது வருடங்களே அவன் வாழ்வான் என்றார் மன்னரிடம். இதனால் அதிர்ச்சியுற்ற மன்னர், வசிஷ்டரிடம், தன் மகனின் ஆயுளை நீட்டிக்க வழி கேட்டார்.

வசிஷ்டர், மன்னரையும் அவர் மகனையும் திருநாங்கூரிலுள்ள பாலசவனத்துக்கு அழைத்துச் சென்றார். காவேரியின் வட கரையில் இருந்த பாலசவனத்தில் முனிவர்கள் தவம் செய்துவந்தனர். இதை அறிந்த அவர்கள், “”பாலசவனத்திலுள்ள மருத ரிஷியின் ஆஸ்ரமத்தில் தங்கி, திருவெள்ளக்குள புஷ்கரணியில் நீராடி, அங்கே குடிகொண்ட மதுசூதனப் பெருமாளை வழிபட்டு, ஒருமனதுடன் மிருத்யுஞ்ஜய மகா மந்திரத்தை ஜபித்தால் மரணத்திலிருந்து விடுபடலாம்”

என்றனர்.

முனிவர்கள் சொன்னபடி ஸ்வேதா, அண்ணன்பெருமாள் கோயில் சென்று, புஷ்கரணியில் நீராடி, தெற்கு மூலையில் இருந்த பில்வ மரத்தடியில் அமர்ந்து ஒரு மாத காலம் மிருத்யுஞ்ஜய மகாமந்திரம் ஜபித்தான். வைகுந்த நாராயணன், சங்குசக்ரதாரியாக, சனக, நாரத, இந்திரர் புடைசூழ காட்சியளித்தார். நீண்ட ஆயுளையும் அருளினார்.

மேலும், “”இந்த திவ்யதேசத்தில், சிரத்தையுடன் மிருத்யுஞ்ஜய மந்திரம் சொல்லுவோர்க்கு மரண பயம் நீக்கி, பிறவியில்லா வரம் நல்க வேண்டும்” என்று கேட்டான் ஸ்வேதா. அவ்வாறே அருள்புரிந்தார் பரந்தாமன்.

இந்த திவ்யதேசத்தில்தான் திருமங்கை ஆழ்வாரின் தேவி குமுதவல்லி நாச்சியார் அவதரித்தார். திருமங்கை ஆழ்வார் இத்திருத்தலப் பெருமானின் சிறப்பை பத்து பாசுரங்களில் பாடியுள்ளார்.

“”பூவார் திருமா மகள் புல்கிய மார்பா!

நாவார் புகழ் வேதியர் மன்னிய நாங்கூர்

தேவா! திருவெள்ளக் குளத்துறைவானே!

ஆவா அடியானிவன் என்றருளாயே!” – என்பது திருமங்கை ஆழ்வாரின் பிரார்த்தனை. அழகிய திருக்கோயிலும், திருக்குளமும் அமையப் பெற்றுள்ள இத்தலத்தில் அண்ணன் பெருமாளை வழிபட்டு, பக்தர்கள் நலன் பலவும், நீண்ட ஆயுளையும் பெறுகிறார்கள்.

தரிசன உதவிக்கு: மாதவ பட்டர் (04364 266534), கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை 8-11.30/ மாலை 5.30-8.30

தகவல்: வெள்ளிமணி

Leave a Reply